“பிரஜா சக்தி” கிராம அபிவிருத்தி குழுக்களை அமைக்கும் போது, அதன் தலைவராக பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் நியமிக்கப்படவுள்ளதோடு, அக் குழுவில் பிரிவுக்குரிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , கிராம உத்தியோகத்தர், விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் உட்பட மக்கள் பிரதிநிதிகள் 15 பேர் இடம்பெற வேண்டும் என்றும் அதற்கான தகவல்கள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும், இனி மேற்கொள்ளபடவிருக்கும் அபிவிருத்தி பணிகள் இக்குழுக்கள் ஊடாகவே முன்னெடுக்கப்படவுள்ளதால் வலுவான குழுக்கள் அமைக்கப்படல் அவசியம் என, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் , பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்கள் (15) பதுளை மாவட்ட செயலக அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட “க்ளீன் ஶ்ரீ லங்கா ” திட்டத்தின் கீழ், ஹாலிஎல நீரேந்து பகுதிகள் பாதுகாப்புத் திட்டம் தற்போது செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், “பிரஜா சக்தி” வறுமை ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்துவதற்கான உத்தியோகத்தர்களின் பயிற்சி மற்றும் நியமனங்கள் தற்போது இடம்பெறுகின்றன எனவும் மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன அவர்கள் தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் அதிகளவில் காணப்படும் 5,067 வீடுகள் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்தது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் தம்பேதென்ன 65 வீடுகள் ,பண்டாரவளை நாயபெத்த 11 வீடுகள் ,ஹல்தும்முல்ல கொஸ்லந்த 27 வீடுகள் , ஹல்தும்முல்ல மல்வன் பிரிவின் 23 வீடுகள் ,பதுளை வேவெஸ்ஸ 18 வீடுகள், பதுளை தெல்பெத்த 12 வீடுகள் , பசறை கனவரெல்ல 12 வீடுகள் , லுணுகல ஹொப்டன் 05 வீடுகள் , மற்றும் வெளிமடை போவ 19 வீடுகளை நிர்மாணிப்பதற்கும் இக்கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

செங்கலடி வீதியின் பதுளை – பிபில வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், சாலையோர பாதுகாப்புத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதோடு பசறை 13- ஆம் மைல்கல் அருகே மண்சரிவு ஏற்படும் பகுதியில் மேல்புற சரிவு பாதுகாப்பு நடவடிக்கைகள் அடுத்த ஆண்டுக்குள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

“புர நெகும” திட்டத்தின் கீழ், பண்டாரவளை பிரதேச சபையினால் ஹீல் ஓயா புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்ட கட்டிடத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள புகையிரத திணைக்களம் தனது இணக்கபாட்டை தெரிவித்தது.

மஹியங்கனை பிரிவில் காணப்படும் அவசரத் தேவை மற்றும் ஆபத்தையும் கருத்திற் கொண்டு, தீயணைப்பு பிரிவு ஒன்றை நிறுவுவது பொருத்தமானது என அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் பரிந்துரை செய்ததுடன் , இதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனவும் கூறினார்,

பதுளை போதனா வைத்தியசாலை, ஊரணிய வைத்தியசாலை மற்றும் மஹியங்கனை வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

உணகொல்ல பதன நீரேந்துபகுதிக்கு அருகே இடம்பெறும் கல் அரைக்கும் ஆலையால் சூழலுக்கு மாசு ஏற்படுவதால் அவை உடனடியாக நிறுத்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இது தவிர , காணி அபிவிருத்தி, நெடுஞ்சாலை அபிவிருத்தி, நகர அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்பதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சட்டவிரோத போதைப்பொருள் பாவனை மற்றும் இளைஞர்கள் அதற்கு ஈர்க்கப்படுவது காரணமாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தடுக்க, பொலிஸ் சோதனைகள் மற்றும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்கள் வலியுறுத்தினார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற பிரதி அமைச்சர்களான கலாநிதி ருவன் ரணசிங்க , தினிந்து சமன் ஹென்னாயக, பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதத் பலகல்ல, ரவீந்திர அருண பண்டார, அம்பிகா சாமுவெல், சாமர சம்பத் தசநாயக, ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, மாவட்ட அரசியல் அதிகாரிகள், ஊவா மாகாண செயலாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பல அரச அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

WhatsApp Image 2025 10 30 at 09.18.46 1
WhatsApp Image 2025 10 30 at 09.18.46 2
WhatsApp Image 2025 10 30 at 09.18.46 3
WhatsApp Image 2025 10 30 at 09.18.46
WhatsApp Image 2025 10 30 at 09.21.45